என் கிறுக்கல்களும் பொருக்கல்களும் உங்கள் பார்வைக்காக

Sunday, April 18, 2010

3. கோடை




சுண்டிக் கொண்டே இருக்கும் கடலும்
சுட்டுக் கொண்டே இருக்கும் உடலும்
மண்டிக் கொண்டே இருக்கும் அயர்வே
வழிந்து கொண்டே இருக்கும் வியர்வை
நொண்டிக் கொண்டே இருக்கும் மாடும்
நொக்கும் வெயிலால் உருகும் லாடம்
அண்டிக் கொண்டே இருக்கும் சூடும்
அழுது கொண்டே திரியும் ஆடும்.


கொட்டிய சருகு பொரித்த அப்பளம்!
கொதிக்கும் மணலை மிதித்தால் கொப்புளம்!
தொட்டியில் ஊற்றிய தண்ணீர் வெந்நீர்!
சோலை மலர்ந்த மலரும் உலரும்!
கட்டி லறையும்உ ரொட்டி அடுப்பே!
கழற்றி எறிந்தார் உடுத்த உடுப்பே!
குட்டை வறண்டது தொட்டது சுட்டது
கோடை மிகவும் கெட்டது கெட்டது!

Monday, April 12, 2010

2. மழை




வானத்தி லேபிறந்த மழையே வா! -இந்த
வையத்தை வாழவைக்க மழையே வா!
சீனிக்கரும்பு தர மழையே வா! - நல்ல
செந்நெல் செழிப்பாக்க மழையே வா!
கானல் தணிக்க நல்ல மழையே வா! - நல்ல
காடு செழிக்க வைக்க மழையே வா!
ஆன கிணறுகுளம் ஏரிஎல்லாம் - நீ
அழகுப டுத்தநல்ல மழையே வா!

2. இயற்கை
1. மழைக்காலம்




வானி ருண்டது மின்னல் வீசிற்று
மடமடவென இடித்து - பயிர்
வளர்ந்தது மழை பிடித்து.


ஆனது குளிர் போனது வெப்பம்
அங்கும்இங் கும்பெரு வெள்ளம் - அட
அதிலும் மீன்கள் துள்ளும்.


பூனை சுவரின் பொந்தில் ஒடுங்கும்
பொடிக் குருவிகள் நடுங்கும்-வண்ணப்
பூக்களில் ஈக்கள் அடங்கும்.

சீனன் கம்பளிக் குல்லாய் மாட்டிச்
சிவப்பு சால்வை போர்த்தான் - அவன்
தெருவில் வேடிக்கை பார்த்தான்!

9. வானொலி






வானொலி எல்லாம் தேனொலி ஆக்கும்
செந்தமிழ்ப் பாட்டைக் கேட்டுக் கேட்டு
நானும் மகிழ்வேன் நாடும் மகிழும்
நானிலம் எல்லாம் நன்றாய் மகிழும்!

ஏன்ஒலி செய்தார் செந்தமிழ் நாட்டில்
இன்னொரு மொழியில் அமைந்த பாட்டை?
நானும் அழவா? நாடும் அழவா?
நமது நாட்டில் அதற்கென்ன வேலை?


தெலுங்கு நாட்டில் தெலுங்கு வேண்டும்
செந்தமிழ் நாட்டில் அதற்கென்ன வேலை?
தெலுங்கு நாட்டில் செந்தமிழ்ப் பாட்டைச்
சேர்ப்பதுண்டா? இல்லவே இல்லை!


விலங்கு பறவை செந்தமிழ் நாட்டில்
விரும்பிக் கேட்பதும் செந்தமிழ்ப் பாட்டை!
குலுங்கும் அரும்பும் செந்தமிழ் நாட்டில்
குளிர்ந்த செந்தமிழ் கேட்டு மலரும்!